சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

தமிழில் பேசியதால் பாதை மாறிய என் வாழ்க்கை...........



பாடசாலை பரீட்சை காலங்களுக்கு பிறக்கு அன்றுதான் என் மனம் அப்படி ஒரு பதட்டமான நிலையில் இருப்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது இன்று அந்த சம்பவம் நடந்து ஒரு பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் என் மனதில் அழியாத நினைவாக அந்த சம்பவமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மலேசியாவில் ஒரு மூன்று வருடங்கள் புதுவிதமான அனுபவங்களோடு ஓடிப்போனது பல ஏமாற்றங்களுக்கு பின் மீண்டும் ஒரு ஏஜென்சி பேசபட்டது. கனடா போக புறபட்ட நான் ஒசாமாவின் இரட்டைகோபுர தாக்குதலால் மலேசியாவில் இருந்து(மலேசியா கடவுசீட்டுக்கு) போகும் பிரயாணிகளுக்கு (முஸ்லீம் நாடுகளுக்கு) “Entry visa” முறை தடை செய்யபட்டதால் பிரான்ஸ் போகலாம் என முடிவெடுத்து அதற்கு தயாராகிகொண்டிருந்த நேரமது

எனது கடவுச்சீட்டு(Passport)  முடிவடைந்த நிலையில் இருந்தது அதற்கு காசு கொடுத்து விசாக்கள் குத்தபட்டது. ஏஜென்சியுடைய திட்டம் என்னவென்றால் நான் இலங்கை கடவுச்சீட்டு பாவித்து மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லவேண்டும் அங்கு வெளியாகாமலே போலி மலேசியா கடவுச்சீட்டை பாவித்து பிரான்ஸ் போவதுதான். மலேசியா தமிழர் ஒருவர் அவருடைய பெயரிலேயே என் படம் போட்டு No 2 மலேசியா கடவுச்சீட்டு எடுத்துகொண்டு என் கூடவே வந்தார் அவர் தனது உண்மை கடவுச்சீட்டு பாவித்து “Boarding pass” எடுத்து கொடுத்தார் நான் எனது இலங்கை கடவுச்சீட்டை அவரிடம் கொடுத்துவிட்டு மலேசியா கடவுச்சீட்டையும் அவருடைய “Boarding pass” யும் எடுத்துகொண்டு என்னை கூட்டி போக வந்த பெண்னோடு(ஓட்டி) தயாராக நின்றேன்.

ஏஜென்சி மூலம் வெளிநாடு போபவரை கூட்டு செல்பவர்களை ஓட்டி என்பார்கள். இந்த ஓட்டி எஜென்ட்டுடைய காதலிகளில் ஒருவர்.

நானும் அந்த மலேசியா பெண்ணும் சேர்ந்து போனால் என்னையும் மலேசியா பையன் என சுலபமாக நம்பவைக்க முடியுமென ஏஜென்சி நம்பினார் அதனால் அந்த பெண்ணையே முதலில் கடவுசீட்டை கொடுக்கும் படியும் இருவரும் கைகோர்த்து அணைத்துக்கொண்டு காதலர்கள் போல போகவேண்டும் என்பதுதான் திட்டம். அது போலவே இருவரும் சென்றுகொண்டிருந்த போது அந்த பெண் கொஞ்சம் இருங்க அந்த “Gate” ல  நிக்கிறவன் தான் போனமுறை என்னை பிடித்தவன் இப்போ இரண்டுபேரும் ஒன்றாயக போனால் கண்டிப்பாக பிடித்துவிடுவான் என்றாள் அப்படியே திரும்பி சென்று ஏஜென்டுக்கு தொலை பேசி அழைப்பு எடுத்தோம் அவரும் என்ன செய்வதென தெரியாமல் இறுதியாக என்னை தனியாக முயற்சி செய்ய சொன்னார். நானும் போய்விட்டால் உதவியாக இருக்குமெனவும்  டிக்கெட் காசு வீணாக கூடாதென அவளை முதலே தனியாக போக சொல்லிவிட்டார்.

இதுக்காகவே பல மாதங்களாக மலாய் மொழியில் பல கேள்விகள் எழுதி கொடுத்து பாடமாக்க சொல்லி இருந்தார் நானும் அதை நன்றாகவே பாடமாக்கி வைத்திருந்தேன் அந்த நம்பிக்கையில் தனியாகவே சென்றேன்

வாசலில் இருந்த சீனன் என்னை மலாயில் சில கேள்விகள் கேட்டார் நானும் நன்றாக சொன்னேன் சரியென தலை அசைத்து உள்ளே போக சொன்னார் எல்லாம் சரியாகி விட்டது என்ற சந்தோசத்தோடு உள்ளே செல்ல முனைந்த பொது உட்பக்க வாசலில் ஒரு மலேசியா தமிழன் சிரித்துக்கொண்டே என்னையும் மலேசியா தமிழன் என்று நினைத்து பேச தொடங்கினார் நானும் ஒரு இரு வசனம் பேசியதுமே உங்க தமிழ் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்றார் இல்லையே என்றேன்... உடனே அவர் நீங்கள் மலையாளி இல்லை இலங்கை என்றார் ... உடனே சீனனிடம் ஏதோ சொன்னார் அந்த தமிழன் .. சீனனும் என்னை அழைத்துக்கொண்டு போனார் என்னை அவர் பின்னால் வர சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினார்

எனக்கு புரிந்துவிட்டது இனி எதுவும் சரியாக வராது என நினைத்துகொண்டு ஒரு திருப்பத்தில் அந்த சீனனின் கண்ணில் இருந்து நான் மறைந்துவிட்டேன்

என் தமிழே எனக்கு எதிரியானது... அந்த மலேசியா தமிழனை திட்டிக்கொண்டே இருந்தேன்.. அந்த இடத்தில் அவருக்கு பெசவேண்டிய தேவையே இல்லை தன் நாட்டு தமிழன் என்ற எண்ணத்தில் சும்மா பேச்சு கொடுக்க போய் என் வாழ்கையின் பாதையை மாற்றிய பங்கு அவருடையதே...

பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் “பாத் ரூம்” சென்று எனது உடை ,தலை இழுக்கும் முறை எல்லாம் மாற்றி மலேசியா கடவுச்சீட்டை கிழித்து போட்டு தண்ணீரை அழுத்தினேன் ,பிரான்ஸ் போனால் தேவைப்படுமென எடுத்து வைத்திருந்த குளிர் “கோர்ட்” டையும் போட்டுகொண்டு வெளியில் வந்தேன் என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியகூடாதென்ற எண்ணத்தில். நான் இப்படி செய்வதற்கு காரணம் இதுபோலவே அந்த ரூட்டில் அடிபட்டு இன்னொருவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் மூன்று நாட்கள் இருந்த அனுபவத்தை முன்பு என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார் அது எனக்கு உதவியாக இருந்தது அதே நேரம் தெம்பையும் கொடுத்தது.

ஏஜென்ட்டுக்கு தொலைபேசியில் நடந்த விடயத்தை சொன்னேன் என்னை சீனன் பிடித்ததை கண்டதுமே என்னை கூட்டிவந்த மலேசியா தமிழர் என் கடவு சீட்டையும் கொண்டு சிங்கபூருக்கு உள்ளே சென்றுவிட்டார். ஓட்டியோ இந்த சந்தர்பத்தை விட்டால் கிடைக்காதென தனியாக பிரான்ஸ் நோக்கி பறந்துவிட்டார். அதனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்னை அப்படியே அங்கே சுத்திகொண்டு திரியச் சொன்னார்

நடந்தது நடந்துவிட்டது என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற முடிவோடு வேறு வழி இல்லாமல் அவர் சொன்னதுபோல சுத்த ஆரம்பித்தேன் மிக பெரிய விமான நிலையம் எப்போதும் விமானம் தரை இறங்கிக்கொண்டே இருக்கும் அதனால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது அதனால் எனக்கு சுலபமாக தப்பித்துகொள்ள முடிந்தது.

இரண்டு “Terminal” இருந்தது இரண்டுக்கும் இடையில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இரண்டு சிறிய பெட்டிகளை கொண்ட மின்புகையிரதம் எப்போதும் ஓடிகொண்டே இருக்கும் இதன் உதவியோடு இரண்டு பக்கமும் இங்கு சில மணி நேரம் , மற்ற  “Terminal” ல் சில மணி நேரம் என செலவிட்டேன்

என்னோடு வந்த ஓட்டி கையில்தான் பணம் எல்லாம் என் கையில் பணம் இல்லை பசிக்க தொடங்கியது என்ன செய்வதென தெரியவில்லை “Sri Lankan Airlines” விமானங்களில் எது எப்போது எந்த “Gate” ல் இலங்கை நோக்கி புறபடுகிறது என பார்த்து அந்த “Gate” வாசலில் இலங்கை செல்ல தயாராக இருக்கும் ஆட்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன் அதில் தமிழர்களா பார்த்து சிரித்தேன் அவர்களும் சிரித்தால் அவர்கள் பக்கத்தில் இடம் இருக்கிறதா என பார்த்து அமர்ந்துகொண்டேன் பின் அவர்களுடன் பேச்சு கொடுத்தேன் சிறிது நேரம் பேசியதும் என் நிலைமையை சொன்னேன் அவர்களாக என்மேல் பரிதாபபட்டு எப்படி இங்கிருந்து போக போகிறீர்கள் இது என்ன கொடுமை எனவும, சிலர் என்னை சமாதன படுத்தினார்கள் அதில் சிலர் சாப்பிடீர்களா என கேட்டு உணவு வாங்கி கொடுத்தார்கள் இப்படியான ஒரு சூழ்நிலை என் வாழ்கையில் இதை தவிர வேறு எந்த இடத்திலும் வந்ததில்லை. நான் இந்த விமான நிலையத்தில் பத்து நாட்கள் இதுபோலவே இருக்க நேர்ந்தது அதுவரை என் உணவுக்கான கையேந்தல் தொடர்ந்தது.

அந்த பத்து நாளும் பழக்கமில்லாத A/C குளிரும் எந்நேரமும் போட்டிருந்த உடையின் இறுக்கமும், தூங்க முடியாத நிலையும் ஒரே இடத்தில் தூங்கினால் பிடிபட்டுவிடுவேனா என்ற பயமும், சரியான உணவின்மையும் எனக்கு மிகவும் புதிய அனுபவமாக இருந்தது

அந்த பத்து நாட்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தேன் அதில் ஒருவர் என் நிலைமையை கண்டுகொள்ளவேயில்லை என்னை வைத்து அவருடைய “Transit” நேரத்தில் சிங்கபூர் விமான நிலையத்தை சுத்திகாட்ட சொல்லி என்னை பயன் படுத்திகொண்டார் ஆனால் அன்று நான் சாப்பிடவில்லை என தெரிந்தும் என்னிடம் பணம் இல்லை என்று தெரிந்தும் எதுவும் வாங்கி கொடுக்காமல் சென்றார் இன்றுவரை இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று நான் அவரை நினைத்ததுண்டு..

நான் ஒரு “பாத்ரூமுக்கு” சில நாளாக போய் வருவதை அங்கு சுத்திகரிப்பு வேலையில் இருக்கும் ஒரு மலேசியா தமிழர் கண்டு விட்டார் நான் “பாத்ரூம்” உள்ளே வந்ததும் என் பின்னே அவரும் வந்து என்னை பற்றி விசாரித்தார் அவரிடம் என் நிலைமையை சொன்னேன் மிகவும் மனமுடைந்து போனார் இறுதி மூன்று நாட்களும் அவர் பகலில் வேலையில் இருக்கும் போது அவருக்கு கொடுக்கும் உணவை எனக்கு கொடுத்துவிட்டு அவர் வெளியில் செல்லும்போது சாப்பிடுவதாக சொன்னார். இது சிங்கப்பூர் இங்கு நாங்கள் இப்படி செய்வது தெரிந்தால் எங்கள் வேலை போவதோடு தண்டனையும் உண்டு பின் எங்களை இந்த நாட்டுக்குள் விட மாட்டார்கள் இருந்தாலும் உங்களுக்கு உதவ வேண்டும் போல இருப்பதாக சொல்லியே உதவிகள் செய்தார்.

பத்தாவது நாள் ஏஜென்டுடைய நண்பர் ஒருவர் அவரும் ஏஜென்ட்தான் எனது இலங்கை கடவுச்சீட்டுக்கு நான் சிங்கபூர் போனது போலவும் மீண்டும் இப்போதுதான் விமான நிலையத்துக்குள் வந்தது போல எல்லா சீல்களையும் களவாக அடித்துக்கொண்டு மலேசியா செல்வதற்கான டிக்கெட்டையும் கொண்டு வந்து பாத்ரூமில் கொடுத்தார். அவருடன் பேசாமல் சிறிது இடம்விட்டு  பின் வர சொன்னார் ,அப்படியே மீண்டும் மலேசியா போய்ச் சேர்ந்தேன்........... 


இதன் பின்னும் பல இதுபோன்ற அனுபவங்கள் ... அதில் ஒன்று விசா இல்லாததால் கோவில் பூசாரியாக வேசமிட்டு ஒரு கோவிலில் சிலகாலம் இருந்தது...............

0 comments:

Post a Comment